டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலால் துறை அமைச்சரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணிஸ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்க துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கலால் வரி கொள்கை முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.