மருத்துவ ரீதியாகப் பணிபுரியும் தகுதியை இழக்கும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
மருத்துவ ரீதியாகத் தகுதி இழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நிலையில், போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கு இந்தச் சலுகை ஏன் வழங்கப்படவில்லை எனக் கோரி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழலுக்கு எதிரான தொழிற்சங்கப் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, “தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவ ரீதியாகத் தகுதி இழக்கும்போது அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் நிலையில், நேரடியாகப் பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கு இச்சலுகைகள் வழங்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இது சம்பந்தமாக ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழகப் போக்குவரத்துத் துறைச் செயலாளருக்கும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.