Homeசெய்திகள்சென்னைஅந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

-

அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். இதனால் பயணிகள் சென்னையில் தவிக்கின்றனர்.

மோசமான வானிலை காரணமாக, விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் நாளை, அந்தமான் புறப்பட்டு செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர்.

 

 

இந்த விமானம் இன்று மதியம், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. அப்போது அந்தமானில் கடும் சூறைக்காற்றுடன், மோசமான வானிலை நிலவிக் கொண்டு இருந்தது. இதை அடுத்து ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் வானிலை சீரடைய வில்லை.

அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த விமானம் இன்று பிற்பகல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.

அதன்பின்பு அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் நாளை (மே 23) சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏர்லைன்ஸ் விமானங்கள் அந்தமானில் தரை இறங்கிய நிலையில், இந்த விமானம் மட்டும் தரையிறங்குவதற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு விமான நிறுவன அதிகாரிகள்,  பயணிகள் பாதுகாப்பு காரணமாக, மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரையிறங்காமல் சென்னைக்கு திரும்பியதாக தெரிவித்தனர்.  நாளை அல்லது வேறு ஏதாவது ஒரு நாளில், நீங்கள் பயணம் செய்யலாம். அதற்குத் தகுந்தாற்போல் உங்கள் பயண டிக்கெட்டுகளை மாற்றிக் கொடுக்கிறோம் என கூறியுள்ளனர். அவசியப்பட்டால் உங்கள் பயண கட்டணம், விதிமுறைகளின் படி, திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இதை அடுத்து பயணிகள் வேறு வழியில்லாமல், டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொண்டு,சென்னை விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டு சென்றனர்.

MUST READ