செல்போனை பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி பலி
பொத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த புது பெருங்களத்துரை சேர்ந்தவர் ரகுராமன். காட்டாங்குளத்தூர் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா (வயது 20). அதே கல்வி நிறுவனத்தில் B.optomic மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கல்லூரி முடிந்து தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வார். ரகுராமனுக்கு வேறு அலுவல்கள் இருந்ததால், மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதற்காக கிருத்திகா திட்டமிட்டு பொத்தேரி ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.
செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து நடைமேடைக்கு செல்லமுயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொத்தேரி ரயில் நிலைய பகுதியில் கல்லூரி மாணவ,மாணவிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் தலைமையில் ரயில்வே போலீசார் பொத்தேரி ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகள் மத்தியில் இரண்டு முறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவி ரயிலில் அடிபட்ட உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.