சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கருணாநிதி பெயரில் சென்னையில் அனைவரும் வியக்கும் வகையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம் திறக்கப்படும். 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட அந்த அரங்கத்தில், பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் நடைபெறும். 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது.
பெரியாரின் கொள்கை வாரிசான கலைஞரை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார். கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது பெரியார் அடைந்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், அவரது புகழுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். அவர் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். அவர் தொடாத துறையுமில்லை, தொட்டு துலங்காத துறையுமில்லை. இன்றும் மக்கள் மனதில் ஆட்சி செய்கிறார்” என்றார்.