Homeசெய்திகள்சென்னைஇரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி

இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி

-

இரண்டாவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள்  ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8  விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம்ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு இணைந்தது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம். ஆனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கேரளா உட்பட சில மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏர் இந்தியா கேபின் குழு ஊழியர்கள்  திடீர் விடுப்புகள் எடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய் நள்ளிரவு  வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் இரண்டு விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

ஆனால் இன்று  வியாழக்கிழமை இரண்டாவது நாளாக, சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து விட்டு பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள் பொறியாளர்கள் இல்லாமல், இன்று மொத்தம் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்,  ரத்து செய்யப்பட்டன.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதைப்போல் நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 4 வருகை விமானங்களும்,

அதைப்போல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும்,  சென்னை விமான நிலையத்தில், வருகை புறப்பாடு, 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இதை போல் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

MUST READ