
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் கடந்த 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மெல்ல வலுவடைந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிலையில், கடந்த 6 மணி நேரத்திற்கு மேலாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது நாகைக்கு 590 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 830 கிமீ தெற்கு – தென்கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. வெயில் இல்லாமல் கருமேங்கங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசிவந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மேலாக பரவலாக மழை தொடங்கியது. இன்று காலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், சென்னை சாந்தோம், மந்தைவெளி, எம்.ஆர்,சி.நகர், பட்டினப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், நெசப்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், மேற்கு மாம்பலம், போரூர், மதுரவாயல், தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது.