பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தூதரகம் முன்பு போராட்டம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழு சார்பாக அமெரிக்க துணை தூதரகம் அருகில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூதரகம் அருகாமைப் பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையிலும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சிக்னல் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் 25 க்கும் மேற்பட்டோர் போராட்டம் மேற்கொண்டனர்.அப்போது தடையை மீறி அமெரிக்காவிற்கு எதிராக பாதகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். கைதுக்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தை மேற்கொண்டதால் குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு அருகாமையில் இருக்கக்கூடிய சமூக நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.