சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள் குறித்து நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் காரணமாக, இன்று (30.11.2024) காலை முதல் பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில் தற்பொழுது மாலை 4 மணி நிலவரப்படி 19.31 அடி உயரம் நிரம்பி, அதன் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில், தற்போது 67% ஆன 2,436 மில்லியன் கனஅடி நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 நீர்த் தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11.76 டிஎம்சி-இல் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாகவும், ஏரிகளின் நிலவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.