சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்குமாறும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று, உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “சனாதன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பற்றி ஊடகங்களில் பார்த்தேன். சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் இன்னும் வரவில்லை. நோட்டீஸ் வந்தவுடன் அது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும். சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.