இமயமலை பயணம் நிறைவு… நாளை சென்னை திரும்பும் ரஜினிகாந்த்…
- Advertisement -
ஆன்மிக பயணமாக இமயமலை சென்ற ரஜினிகாந்த், நாளை சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் தான் அவரது இறுதித்திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில், ரஜினி தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், அனிருத் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மேலும், படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேட்டையன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் விடுமுறையை கழிக்க அபுதாபி சென்றார். 11 நாட்கள் கழித்து சென்னை திரும்பிய அவர், மீண்டும் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றார். ஆண்டுதோறும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ரஜினி, நடப்பாண்டும் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பர்திநாத்தில் யோகி ஒருவருடன் பேசிய ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்கள் குறித்த தகவலை தெரிவித்தார். இந்நிலையில், ஒரு வார கால பயணமாக இமயமலை சென்ற ரஜினிகாந்த், நாளை சென்னை திரும்புகிறார். பின்னர் கூலி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார்.