அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி தமிழக அரசில், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.10,50,000/- பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, அவர் மீது சென்னையை சேர்ந்த முகமது மொஹிதின் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய நல்ல தம்பி, ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது, முதலில் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இரண்டு மாதங்களில் மொத்த பணத்தையும் மொஹிதினிடம் திரும்ப அளிப்பதாக விஜய நல்லதம்பி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உறுதி அளித்தப்படி பணத்தை திரும்ப வழங்கவில்லை என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென மொஹிதின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி T.V. தமிழ் செல்வி, பணத்தை திருப்பித் தருவதாக உத்தரவாதத்தை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்