வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது
மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா. இவருக்கு வயது (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பேரூந்து நிலையம் அருகிலுள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.

ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பேரூந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது பேரூந்து நிலையத்தில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது.

அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது, அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைக்கண்ட அருகிலுள்ள ஓட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களை தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (வயது 26), கிருஷ்ண மூர்த்தி (வயது 24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24), பாரத் (வயது 20), குணசேகரன் (வயது 25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது27) ஆகிய ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.