கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருந்த நிலையில் கவிதா சிவாவை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். மேலும் கவிதா மீது கடந்த 2016 ல் பேருந்தில் பயணம் செய்த தெய்வசந்திரா என்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்ததாக, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோவை 1 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக இன்று வழக்கம் போல கவிதா நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது சாட்சிகள் வரும் வரை நீதிமன்ற அறை அருகே உள்ள காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கவிதாவின் முதல் கணவர் சிவா, திடிரென தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றியுள்ளார். இதில் கவிதா முகம் மற்றும் உடலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே வேறு வழக்கு விசாரணைக்கு வந்த மேலும் 4 பேர் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்படுள்ளது.
கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை காப்பாற்ற முகத்தின் மீது வழக்கறிஞர் அங்கியை போட்ட போது அங்கியும் ஆசிட்டில் கருகியது. பின்னர் கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 4 இளைஞர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வழக்கு விசாரணைக்காக வந்த பொள்ளாச்சி ஆனைமலை பெண் காவலர் இந்து சக காவலர்களுடன் சேர்ந்து, ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பிச் சென்ற சிவாவை துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். இதையடுத்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து வந்த நிலையில், அங்கு கூடிய சக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு ஆசிட்டை எடுத்து வந்து ஊற்றிய சிவாவை கடுமையாக தாக்கினர். பின்னர் அவரை போலீஸார் மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கவிதா, சிவா மற்றும் குழந்தைகளை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதால் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலில் ஆசிட் எடுத்து வந்து வீசியது தெரியவந்தது.