பல்லடம் நீதிமன்ற விசாரணைக்கு வரும் அக்னி பிரதர்ஸ், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கையை சேர்ந்த வினோத் கண்ணன் என்ற பிரபல ரவுடியை அக்னி பிரதர்ஸ் என்ற கும்பல் சாலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர். இதனை அடுத்து வினோத் கண்ணனை கொலை செய்து தப்பிச்சென்ற அக்னி பிரதர்ஸ் கும்பலான சிவகங்கை சேர்ந்த காளீஸ்வரன் நிதிஷ்குமார், பிரபு தேவா, சாமிநாதன், தங்கமணி, அஜய் தேவன், சுரேஷ் உட்பட 9 பேரை பல்லடம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து 9 பேரும் ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் அக்னி பிரதர்ஸ் குழுவினர்க்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நெல்லையில் நடந்த சம்பவம் போன்று எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் வரும் நபர்களை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பல்லடம் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை; இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் கைது