ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி அருள் உயிருக்கு ஆபத்து.போலீசார் அருளை காவலில் எடுத்து விசாரிக்க கூடாது. ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி பரபரப்பு புகார் அளித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி திருவேங்கடம் என்ற குற்றவாளி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் 5 நாட்களுக்கு காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பிரமுகரும், வழக்கறிஞருமான அருளை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி அபிராமி இன்று (ஜூலை 18) தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் மனு அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தனது கணவர் அருளை மேலும் 5 நாட்களுக்கு போலீசார் காவலில் எடுக்க இருப்பதாக கூறுகின்றனர். அவர் ஏற்கனவே 5 நாட்களுக்கு காவல் எடுத்தபோது அவர் அனைத்து உண்மைகளும் கூறிவிட்டார்.
மேலும் போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அழைத்து சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எனக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லக்கூடாது என புகாரளிக்க வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தன்னையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமும் இல்லை எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை- கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு!
அவர் மேலும் கூறுகையில்,தனது கணவர் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கலாம், ஆனால் அவரது உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது, தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது எனவும் அவர் கூறினார்.