மதுபோதையில் மைத்துனரின் பைக்கில் வந்து அட்டூழியம் — புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னையில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை வேளச்சேரி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி என்ன?
கடந்த 26-ஆம் தேதி இரவு, சென்னை வேளச்சேரி பகுதியில் பெண் ஒருவர் தனது கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நடந்து சென்ற பெண்ணுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு, திடீரென அப்பெண்ணிடம் தவறான முறையில் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் தம்பதியினர், உடனடியாக இதுகுறித்து அருகில் இருந்த வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் வெளியான தகவல்கள், பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர், போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மணிமாறன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த நாளில், காவல் ஆய்வாளர் மணிமாறன் தனது மைத்துனரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், இருவரும் பலத்த மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவர்கள் அத்துமீறி நடந்துகொண்டதும் அம்பலமாகியுள்ளது.
அதிரடி கைது மற்றும் விசாரணை
காவல்துறையில் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டே, பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் மணிமாறனை வேளச்சேரி போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். சட்டம்-ஒழுங்கை முறைப்படுத்த வேண்டிய காவல்துறையினரே இதுபோன்று மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் மணிமாறனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
