ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் (56). இவரிடம் தேனியை சேர்ந்த குமார் மற்றும் மற்றொரு நபரான ராஜேஷ் என்பவர் விலை மதிக்க முடியாத இரிடியம் உள்ளதாகவும் அதனை வாங்கி வெளியே விற்றால் ரூ.5 கோடி வரை வருமானம் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, அவரை குடும்பத்துடன் தேனிக்கு வரவழைத்து அவரிடம் இருந்து ரூ.9.50 லட்சத்தை வாங்கி கொண்டு ஒரு பெட்டியில் பித்தளை செம்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட நபர் ஜஸ்டின் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகவரி தெரியாத குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் பதுங்கியிருந்த குமார் என்ற ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் பெற்ற பணம் குறித்தும் மற்றொரு நபரான ராஜேஷ் என்பவர் குறித்தும் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் பெற்ற பணத்தை நானும் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரிடம் இருந்து ரூ.4.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரிடியம் மோசடியில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


