புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலைக்குன்றில் கிடைத்த பழங்கால புதையலில் தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கி ஜல்சா செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ₹ 14 லட்சம் பணம், பழங்கால தங்க நாணயம், கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி., கூறும்போது, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த அஜித், அமரன், வருண் ஆகியோர் கடந்த மே 7ம் தேதி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை குன்றின் மீது பழமையான அங்கம்மா கோவில் அருகே தேன் எடுக்க சென்றனர். இதை அறிந்த அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியம், வெங்கடேஷ்வரனும் அங்கு சென்றனர்.
அப்போது ஒரு பெரிய பாறைக்கு அடியில் புதையல் போன்று சொம்பு இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த வருண் சக நண்பர்களுடன் சேர்ந்து அந்த பாறையை அகற்றினர். அப்போது அதன் அடியில் ஒரு பித்தளை சொம்பு இருந்தது. அதை வெளியே எடுத்து உடைத்தபோது அதில் மண் கலந்த தங்ககாசுகள் இருப்பதை பார்த்து அஜித், அமரன் சொம்பில் இருந்த தங்க நாணயங்களை எடுத்து கொண்டு காலி சொம்பை ஏரியில் வீசிவிடும்படி கூறி வருணையும், சுப்ரமணியத்தையும் மிரட்டி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதற்குள் வருண் அந்த தங்க காசுகளை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு சென்றான். இந்த நிலையில் உறவு முறையில் சகோதரர்களான அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோர் தங்க நாணயங்களை சென்னைக்கு கொண்டு விற்பனை செய்தனர். இதில் சுமார் 770 கிராம் தங்கத்தை உருக்கி நகைகள் செய்து கொண்டும் ₹ 4 லட்சம் பணத்தில் கார் மற்றும் ஆட்டோ வாங்கினார். தனது சகோதரி மகளிர் குழு மூலம் வாங்கிய ₹ 1 லட்சம் கடனை அடைத்தனர்.
அஜித் மற்றும் அமரின் நடத்தையில் சந்தேகமடைந்த வருண் மற்றும் அவரது சகோதரியும் புதையல் சொம்பில் கிடைத்த தங்க காசுகளை காண்பித்து நெல்லூர் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரிடம் காண்பித்து அந்த புதையலை மீட்க வேண்டும் என புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்தனர். இதனையடுத்து நெல்லூர் ஊரக டிஎஸ்பி வீராஞ்சநேய ரெட்டி தலைமையில் பொடலகுரு இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வர ராவ், எஸ்எஸ்ஐ கரிமுல்லா மற்றும் போலீசார் அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோரை பிடித்து சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயம், ₹ 14 லட்சம் பணம், 21 சவரன் தங்கம் ஆபரணங்கள், 436 சிறிய தங்க நாணயங்கள், 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு ஜைலோ கார், ஒரு பயணிகள் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஏரியில் வீசப்பட்ட பித்தளை சொம்பை எடுக்க போலீசார் 10 அடி ஆழத்தில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் தேடியும் அந்த சொம்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சித்தேப்பள்ளியில் புதையல்கள் எதுவும் இல்லை. எனவே புதையல் இருக்கலாம் என சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜேசிபி மூலம் யாரேனும் சென்று தோண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.