கோவையில் ஆன்லைன் நிறுவனத்தில் பொருட்களை திருடி மோசடி செய்த கும்பலை போலீசாா் கைது செய்தனா்.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பார்சல் குடோன் உள்ளது. பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர் குமார், போத்தனூர் சேர்ந்த ஸ்ரீ சஞ்சய், செட்டிபாளையத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ், கேரளா மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த அஷ்லா, முகமத் ஆதில், அஞ்சலி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி 7 கிலோ சோப்பு பவுடர் வேண்டும் என வாடிக்கையாளர் கூறியதால் குடோனுக்கு வந்து உள்ளது. அதை பொருட்கள் திரும்பப்பெறும் பிரிவில் டீம் லீடராக பணியாற்றி வரும் சேது கபிலேஷ் என்பவர் வாங்கிப் பார்த்தார். அப்பொழுது அங்கு உள்ள சோப்பு பவுடருக்கு பதிலாக மடிக்கணினி ஒன்று இருந்தது. பேக்கிங் செய்யும் போது தவறுதலாக பொருட்களை மாற்றி இருக்கலாம் என்றும் எண்ணினர். இதுபோன்று மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் 7 கிலோ சோப்பு பவுடர் ஆர்டர் செய்து விட்டு வேண்டாம் என்று திரும்பியதாக, பார்சல் மீண்டும் குடோனுக்கு வந்தது. அதை சேது கபிலேஷ் பிரித்துப் பார்த்த போது அதற்குள்ளும் ஒரு மடிக்கணினி இருந்தது தெரியவந்தது.

உடனே பேக்கிங் பிரிவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் விக்னேஷ், கிஷோர் குமார், ஸ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், அஸ்ஸலாம் முகமத், ஆதில், அஞ்சலி ஆகியோர் தாங்களே சோப்பு பவுடர்களை தங்களது முகவரிக்கு ஆர்டர் செய்து அதில் சோப்பு பவுடர்களுக்கு பதிலாக ரூபாய் 11,50,000 மதிப்பு உள்ளான மடிக் கணினிகளை நூதன முறையில் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிறுவன அதிகாரி சக்திவேல் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், கிஷோர் குமார், ஸ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், அஷ்லா, முஹம்மத் ஆதில் ஆகிய 7 பேர் மீது செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். தலைமறைவான அஞ்சலியை போலீசார் தேடி வருகின்றனர்.


