போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், அவரது தாயார் ருக்குமணியின் பெயரில் உள்ள 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கட்டிடத்துடன் கூடிய இடம், 2019-ல் அவர் இறந்துவிட்டதை பயன்படுத்தி, சிலர் போலி ஆவணங்கள் உருவாக்கி, ருக்குமணி போல ஒருவரை ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். பின்னர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோருக்கு கிரயமாக அளித்து, அந்த சொத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்றுள்ளனர் என புகர் அளித்தார் . புகாரின் பேரில் இந்த வழக்கு தொடங்கியது.

தாராசந்தின் புகாரின் பின்னர் மத்தியகுற்றப்பிரிவு இந்த வழக்கில் 5 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளது. முக்கிய குற்றவாளி கமலகண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.
மற்றொரு மோசடி வழக்கில், ரமேஷ் உல்லா மற்றும் பாரதி உல்லா ஆகியோருக்குச் சொந்தமான சோழிங்கநல்லூரில் உள்ள 12,000 சதுரடி நிலத்தை, கமலகண்ணன் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து போலியான விற்பனைப்பத்திரம் மூலம், வெளிநாடு வாழ் இந்தியரான ஷியாஸ் புதுவிட்டில் மற்றும் அவரது மனைவிக்கு விற்றது போல ஆவணங்கள் உருவாக்கினர்.
இந்த போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, SBI – எழும்பூர் கிளையில் ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஷியாஸ் புதுவிட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் கமலகண்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், கூடுதல் ஆணையாளர் ராதிகா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, கமலகண்ணன் பெங்களூரில் தங்கியிருந்ததை கண்டறிந்து 18.11.2025 அன்று கைது செய்தது. விசாரணையில், கமலகண்ணன் மீது ஏற்கனவே மத்தியகுற்றப்பிரிவில் 13 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கமலகண்ணன் நேற்று (19.11.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.


