சென்னை மயிலாப்பூர் பாஸ்கரா புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் தாப்பா வயது 21 ,என்பவர் கடந்த ஒரு மாதமாக காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆசைத்தம்பி வயது 71 என்ற முதியவர் நேற்று இரவு வெளியில் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தை குடியிருப்பு வாசலில் நிறுத்திய போது, காவலாளி கணேஷ் தாப்பாவின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அங்கு சென்று பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் கணேஷ்தாப்பா கிடந்துள்ளார். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.apcnewstamil.com/news/avadi/1-5-year-old-girl-dies-in-avadi/95735
சடலத்தை கைப்பற்றி மயிலாப்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேபாளத்தை சேர்ந்த இளம் பெண்ணை அழைத்து வந்து கணேஷ் தாப்பா குடும்பம் நடத்தியுள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மாதம் அந்த பெண் இவரை விட்டு சென்றுள்ளார்.ஆனாலும் தினமும் கணேஷ் தாப்பாவுக்கு போன் செய்து , அவரை கண்டபடி திட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த கணேஷ் தாப்பா, தனது வலது மார்பில் மின்சாரத்தை செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, கணேஷ் தாப்பா தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி இறந்தாரா? அல்லது தவறுதலாக ஒயரில் கை பட்டு மின்சாரம் தாக்கி இறந்தாரா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடலில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.