சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக கூறி 96.5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். சுமார் 96 லட்சம் 57 ஆயிரத்து 953 ரூபாயை பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக அனுப்பி ஆன்லைன் மோசடியில் ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆன்லைன் பணமோசடி செய்த நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் 38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை முடக்கம் செய்துள்ளனர் .
வழக்கு தொடர்பாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அணுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து விசாரணை செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் 20 லட்சம் ரூபாயில் ஆன்லைன் பணமோசடி செய்தது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக்தாவுத் மகன் சீனி முகமது என்ற நபரின் இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை சீனிமுகமது பணமாக வங்கியில் இருந்து எடுத்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
சீனி முகமதுவின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அவரை திருச்சி சென்று கைது செய்து விசாரணை செய்ததில், மேற்கண்ட வங்கி கணக்குகளை திருச்சி உறையூரை சேர்ந்த இப்ராகிம் என்பவரது ஆலோசனையின் பேரில் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு திருச்சி தனரத்தின நகரை சேர்ந்த முகமது சபீர் முகமது ரியாஸ், திருச்சி உறையூரைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியை சேர்ந்த முகமது மர்ஜீக் ஆகியோருடன் சேர்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் ரொக்கமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த பணத்தினை, அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மெசேஜில் வரும் இரகசிய குறியீடை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களிடம் அந்த பணத்தினை கொடுத்து அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி ஒரு இலட்சம் ரூபாய்க்கு 1000 ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கில் பணம் கமிஷனாக பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது
சைபர் கிரைம் தனிப்படையினர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து சைபர் கிரைம் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்த பணம் ரூ.1 கோடி வரை பெற்று ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மேலும் இவர்கள் மேற்குவங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவரை கொல்ல முயன்றது ஏன்?: விக்னேஷ் அதிர்ச்சி வாக்குமூலம்