தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில் மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெகுலப்பள்ளி கிராமத்தை வெங்கடேஷ்வர்லு – அனுராதா தம்பதியினரின் மகள் காவ்யாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பல்வஞ்சா மண்டலத்தில் உள்ள தண்டலபோரு கிராமத்தைச் சேர்ந்த பல்லேம் கௌதம்(24) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிடெக் முடித்த கௌதம் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து சுஜாதாநகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டு காவ்யா தனது சொந்த ஊருக்குச் பிள்ளைகளுடன் சென்றுவிட்டார். இந்த சூழலில், பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு, கௌதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க தனது மாமியார் வீட்டிற்குச் சென்றார். வீட்டில் இருந்த அவரது மாமியார், மாமா மற்றும் தாத்தா பாட்டி கௌதமை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அவர்கள் கௌதம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர்.
தீப்பிழம்புகளைத் தாங்க முடியாமல், கௌதம் அலறி அடித்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தார். படுகாயமடைந்த அவரை பக்கத்து வீட்டுகாரர்கள் கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கெளதம் குடும்பத்தினர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கெளதம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கெளதம் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.