சைபர் கிரைம் போலீசில் நூதன புகார். புதுச்சேரியில் ரத்ததானம் வழங்க வருவதற்கு, பெட்ரோலுக்கு ரூ.500 கேட்டு நூதன முறையில் பணம் பறிப்பு.உலகம் முழுவதும் சைபர் கிரைம் கும்பல் பல்வேறு வகையில் மக்களின் சேமிப்பை திருடி வருகின்றனர். கிரிப்டோ கரன்சி, டிஜிட்டல் அரெஸ்ட், வேலை வாய்ப்பு, முதலீடு, எளிய கடன், பெண் ஆசை என பல வகைகளில் நுாதனமாக ஏமாற்றி வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் புதிய புதிய வகையில் ஏமாற்றுவது தொடர்கிறது. இந்த நிலையில் புதுவையில் நுாதனமாக ஒருவரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
புதுவை வில்லியனுாரை சேர்ந்த ஒருவரின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவரை தொடர்புகொண்ட ஒரு நபர் தான் ரத்தம் அளிக்க வருவதாகவும், மயிலம் பகுதியிலிருந்து வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் ரூ.500 ஜிபே செயலியில் அனுப்பும்படி கோரினார். இதையடுத்து அந்த நபருக்கு பணத்தை அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் மேலும் 4 பேர் தன்னோடு வருவதாகவும் அவர்களுக்கும் பெட்ரோல் வாங்க பணம் அனுப்பும்படி கோரினார். இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் நேரடியாக வரும்படி கூறினார். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் தான் நுாதனமாக ஏமாற்றப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்டவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் பணம் பெற்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல நுாதன முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.