காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் சொந்த ஊரான கரூருக்கு திரும்பும் வழியில் மணமகனின் உறவினர்களால் பேருந்தை வழிமறித்து கடத்தியுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளம்பெண் பேட்டியளித்துள்ளாா்.

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதலுக்கு இரு விட்டாலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் உதவியுடன் கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் கோவையிலேயே தங்கி உள்ளனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை பேருந்து மூலம் சொந்த ஊரான கரூருக்கு திரும்பி உள்ளனர். அப்போது பல்லடம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கணபதியின் உறவினர்கள் இடையில் பேருந்தை வழி மறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து கரூர் அடுத்த தான்தோன்றி மலைக்கு அழைத்து வந்து கணபதியின் உறவினர் வீட்டில் வைத்து இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து, உனது தங்கையை கூட்டி செல் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவோம் என்று கூறியுள்ளனர். அதனையடுத்து நண்பர்களுடன் அங்கு சென்று தங்கையை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சை பெற்று, சிகிச்சையில் இருந்த திருமணமான இளம் பெண் சதயவர்த்தினி செய்தியாளர்களை சந்தித்து, தனக்கு நடந்த பிரச்சனை குறித்து பேட்டியளிக்க வெளியே வந்தபோது, அந்த பெண் வெளியே வரக்கூடாது என போலீசார் வலுக்கட்டாயமாக உள்ளே செல்லுமாறு கூறினர். அதையும் மீறி சதயவர்த்தினி நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியளித்துவிட்டு உள்ளே சென்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக எடுத்துரைத்தார். மேலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரை மீட்டு, தனது தங்கையுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரி! மூடி மறைக்கப்படும் கீழடி! வேலையை காட்டிய மோடி!