கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர். வைத்தீஸ்வரிக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் உள்ளார். சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதை அறிந்த கவிதா தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த திங்கள் கிழமை இரவு 11 மணியளவில் வீட்டின் மேல் மாடியில் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரங்கசாமியை அவரது மகன் சூர்யா மற்றும் மகள் சாதிகா ஆகிய இருவரும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புதன் கிழமை காலை ரங்கசாமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீசார் ரங்கசாமியின் மனைவி கவிதா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடந்த வியாழக்கிழமை கவிதாவின் உறவினர் ஒருவருக்கு திருப்பதியில் இருந்து செல்போன் மூலம் கவிதா பேசியுள்ளார். இதையடுத்து அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் திருப்பதியில் பதுங்கி இருந்த கவிதாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கவிதா கூறுகையில், எங்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் சொத்து, பணம், நகைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் ரங்கசாமிக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை நான் கண்டித்தேன். ஆனால் அவர் மஞ்சுளாவிடம் பழகுவதை நிறுத்தவில்லை.மேலும் வீட்டில் இருந்த 80 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவிற்கு கொடுத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், நிலத்தை விற்று அந்த பணத்தையும் கொடுத்துவிட்டார். சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறோம். ரங்கசாமி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் வருவார். அதுவும் குடித்துவிட்டு தான் வருவார். அவர் என்னை அசிங்கமாக பேசுவதுடன் நீ அழகா இல்ல, நீ அசிங்கமா இருக்கிற, நீ எல்லாம் எதுக்கு என்கூட இருக்கிற என சொல்லி அடித்து துன்புறுத்துவார்.
அதேபோல தான் அன்றைக்கும் குடித்து விட்டு வந்த அவர் வீட்டின் மேல் பகுதியில் அழைத்துச் சென்று என்னை அடித்து உதைத்தார். பின்னர் நான் அழுது கொண்டே அங்கேயே இருந்தேன் அவர் போதையில் தூங்கிவிட்டார். நான் கோவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாய நிலத்தில் மருந்து தெளிப்பதற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து அவர் மீது ஒரு பெட்ஷீட் போட்டு அதன் மீது பெட்ரோலை முழுவதுமாக ஊற்றிவிட்டு, கட்டையில் துணியை சுத்தி பந்தம் போல் தயார் செய்து அதன் மூலம் அவரை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்று விட்டேன் என போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் கவிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.