ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்று சம்பந்தமாக சரண் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு, அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சரணை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனைக் கண்ட சரணும், அவரது நண்பரும் உடனடியாக பைக்கை அங்கேயே விட்டுவிட்டு இறங்கி ஓடியுள்ளனர். முட்புதருக்குள் நுழைந்து ஓடியதில் சரணின் நண்பர் தப்பியோடிவிட்டார்.
ஆனால் சரணை விடாது துரத்திய அந்த கும்பல், முட்புதற்குள் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை, முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த சரண் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்து உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் பாஸ்கர் நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் சரணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால், அவர் தொடர்புடைய முந்தைய வழக்குகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரண் இறந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.