புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில், தேடப்பட்ட வந்த தொழிலதிபரை கோவையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைதான தொழிலதிபர், சினிமா படங்களில் வருவது போல தனது செல்போனை மட்டும் ராஜஸ்தான்-குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி, போலீசாரை அலைக்கழித்தது தெரிய வந்தது.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வைரமணி (வயது 57). இவர் 45 அடி சாலையில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தினார். இவரிடம் சீட்டு கட்டி ஏமாந்த முருகன் சிபிசிஐடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தொழிலதிபர் வைரமணி, அவரது மகன் தேவா, மகள் தவமணி மற்றும் சீட்டு நிறுவன ஊழியர்கள் லாஸ்பேட்டை புஷ்பா, வம்பாகீரப்பாளையம் மணிமேகலை, மேலாளர் பாகூர் பாலா ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஏலம் சீட்டு நடத்தி பலரிடம் ரூ.கோடி கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இவர்களிடம் முன்னாள் எஸ்.பிக்கள், தொழிலதிபர்களும் சீட்டு கட்டி ஏமாந்திருந்தனர்.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான வைரமணியை தேடி வந்தனர். அவரின் செல்போன் டவர் குஜராத், ராஜஸ்தான் பகுதியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். ஆனால் வைரமணி, சினிமா படங்களில் வருவது போல தனது செல்போனை மட்டும் அனுப்பி, போலீசாரை அலைக்கழித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைரமணியின் நெருங்கிய நண்பர்களின் செல்போன் டவர்கள் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் வைரமணி கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவைக்கு சென்று வைரமணியை கைது செய்துள்ளனர். அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
13 வருட காதல்…நடுரோட்டில் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…


