கோவையில் திடீரென மாயமான 12 வயது சிறுமிகளை 2 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவை போத்தனூரில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிகள் 4 திடிரென மாயமாகியுள்ளனர். உடன் படிக்கும் தோழிகளை சந்திக்க செல்வதாக கூறி சென்ற சிறுமிகள் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த பெற்றோர் உடனடியாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக கோவை மாநகர காவல் ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆணையர் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதல்கட்டமாக சிறுமிகள் வைத்திருந்த செல்போன் சிக்னல்கள் இறுதியாக ஆப் செய்யப்பட இடத்தை வைத்து அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய துவங்கினர். 12 வயது சிறுமிகள் என்பதால் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர். அதில் சிறுமிகள் செல்வதை சிசிடிவி மூலம் போலீசார் உறுதிபடுத்தி அவர்கள் செல்லும் பாதைகளை கண்டறிந்தனர். இறுதியாக சிறுமிகள் கோவை ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த தனிப்படை போலீசார் சென்னை செல்ல காத்திருக்க 4 சிறுமிகளை மீட்டனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, சிறுமிகளில் ஒருவர் சென்னையை சேர்ந்த யுடியூபர் மோனாலிஷா (22) என்பவரின் பக்கத்தை பின் தொடர்ந்து வந்ததும், பெற்றோர்கள் வீட்டில் படிக்கக் கூறி கண்டித்து வந்ததால் சென்னைக்குச் சென்று மோனாலிஷாவுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து மோனாலிஷாவிற்கு சிறுமிகள் இன்ஸடா மூலம் குறுஞ்செய்தியை அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த யுடியூபர் மோனாலிஷாவிற்கு சிறுமிகள் சென்னை வருவது தொடர்பான தகவல்களை அனுப்பியிருந்ததால் அவரிடமும் விசாரணை மேற்கொள்ள சம்மன அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் சிறுமிகள், இளம் பெண்கள் விடியோ வெளியிடுவதை கண்டு, நாமும் இதே போல படிக்காமல் பிரபலம் ஆகலாம் என்ற ஆசையில் கோவையை சேர்ந்த 12 வயது சிறுமிகள் வீட்டை விட்டு சென்னை செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
