புழல் சிறைக் கைதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய போது ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்.
சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கொத்தவால்சாவடியை சேர்ந்த மினர்வா அஜீத் மெத்தம்பெட்டைமன் என்ற போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னை வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைப்பதற்காக போலீசார் மினர்வா அஜீத்தை அழைத்து வந்தனர். அப்போது சிறை காவலர்கள் முழு பரிசோதனை செய்தபோது விசாரணை கைதி மினர்வா அஜீத் ஆசனவாயில் மறைத்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணை கைதி சிறைக்குள் கடத்த முயன்ற 5 கிராம் கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புழல் சிறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் சென்றவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது, யார் கொடுத்தார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் சென்று சிறைக்கு திரும்பிய கைதி ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்தி வந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.