குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் (ஆளுநர் மாளிகை) சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் மாநில அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சமீபத்தில் ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


