மின்கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீவிபத்து- 15 கடைகள் எரிந்தன
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்த 15 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள புகழ்பெற்ற பிரம்ம ராம்பிகா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அருகே லலிதாம்பிகை ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எல் பிளாக் வளாகத்தில் இருந்த 15 கடைகள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் கருவிகள் மூலம் பரவி வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஸ்ரீசைலம் தேவஸ்தான செயல் அதிகாரி லாவண்ணா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.