கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி, வாந்தி, மயக்கம், சுவை மாற்றம்,பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆறுகள், நீரோடைகள் குளங்களிலிருந்து பரவி மூளையை தின்னும் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் கேரளாவில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல், பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல அறிவுறுத்தல்களை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது. அதில், சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களாக இருந்தால் அதற்கான மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரைக்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும். சபரிமலைக்கு வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது எனவே சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்த ஒரு அச்சமும் பட தேவையில்லை. சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி, வாந்தி, மயக்கம், சுவை மாற்றம், பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


