கேரளாவில் சிகிச்சையின்போது பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் வந்தனா தாஸ் (வயது 22). இந்நிலையில், மருத்துவர் வந்தனா நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவருக்கு அவர் சிகிச்சை கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென அவரை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். அத்துடன், போலீசார் உள்பட பலர் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவமனையில் பெண் டாக்டர் நோயாளியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், மருத்துவமனைகளை மூடுங்கள் என கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த வரும்படி, மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதோடு, சட்டத்தின்படி முழு அளவில் குற்றவாளி தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று, பணியிடங்களில் சுகாதார நலம் சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.