குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில அரசில் முக்கியமான அரசியல் மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் தலைமையிலான தற்போதைய மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 16 அமைச்சர்களும் இன்று தங்களது பதவியை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த முடிவு நாளை (அக்டோபர் 17) காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ள புதிய மந்திரிசபை பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடாகும். விழா காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவரத் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனர். முதலமைச்சர் புபேந்திர படேல் தவிர, மற்ற அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்நது புபேந்திர படேல் இன்று இரவு ஆளுநரை சந்தித்து புதிய அமைச்சர்கள் பட்டியலை வழங்க உள்ளார்.
புதிய அமைச்சரவை அமைப்பில் இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. சில முக்கிய துறைகளில் பணியாற்றிய நிதி, கல்வி, நகராட்சி போன்ற அமைச்சர்கள் மீண்டும் வாய்ப்பு பெறலாம் என்றாலும், பெரும்பாலான இடங்கள் புதியவர்களுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, இந்த மந்திரிசபை மாற்றம், பா.ஜ.க. கட்சியின் “No Repeat Formula” அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலோர் மீண்டும் நியமிக்கப்படமாட்டார்கள். இது கட்சியில் புதிய தலைமுறையை உருவாக்கும் முயற்சியாகவும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னோட்டத் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. மாநில மற்றும் மத்திய தலைமைகள், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பரில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை செப்டம்பரிலேயே நடத்தியது ஏன்? – உண்மை கண்டறியும் குழுவினர்