டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் இன்று முதல் டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தொண்டர்களும் முழு பலத்துடனும், உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரிய அமைப்புகள் ஆம் ஆத்மி தொண்டர்களின் பணிகளுக்கு முன்னால் தோல்வியடைவதாகவும், ஆம் ஆத்மியின் தொண்டர் பலன் மிகப் பெரியது என தெரிவித்துள்ள கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்றத் தேர்தல் என்பது வேலை செய்யும் உறுப்பினர்களைக் கொண்ட அரசியலுக்கும் அரசியலை துஷ்பிரயோகம் செய்வோர்க்கும் இடையில் நடைபெறும் தேர்தல் என்றும், டெல்லி மக்கள் ஆம் ஆத்மீ கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.