கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்ததால், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டது.
மருத்துவ மாணவி படுகொலை வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிகை தாமதமாக பதிவு செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். மருத்துவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகி வருவதாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க மற்றொரு சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இளம் மருத்துவர்கள், தனி பணியிட அறைகள், உரிய வசதிகள் எதுவும் இல்லாமல் பல மணி நேரம் பணியாற்றுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு மட்டும் பிரச்சனையாக இல்லை. பணி சூழலும் முக்கியமான பிரச்சனையாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் அதிகளவில் வெளியாகியுள்ளதாகவும், இது தான் அவருக்கு கொடுக்கும் மரியாதையா என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 22ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என கூறிய நீதிபதிகள், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும உத்தரவிட்டனர்.