![பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/05/921224-supreme-court-2-1-5.jpg)
ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வுக் கண்டால் வரவேற்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (டிச.01) காலை 10.00 மணிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் ஆளுநர். ஒப்புதல் தராமல் நவம்பர் 28- ஆம் தேதி 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்” என்று வாதிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி, “முதல்முறை மசோதா அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கலாமே? மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறு நிறைவேற்றம் செய்த பின் அனுப்பியது ஏன்? மறு நிறைவேற்றம் செய்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும்? மசோதாக்களை சட்டப்பேரவைக்கும் ஆளுநர் திருப்பி அனுப்பாததால் அவர் தரப்பில் குழப்பம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் சாசனம் 200 வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கலாம். மசோதாவைத் திருப்பி அனுப்பவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவும் ஆளுநருக்கு அதிகாரமுண்டு” என வாதிட்டார்.
செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!
இதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “ஆளுநர்- முதலமைச்சர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வுக் காண வேண்டியுள்ளது. ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும். முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்குத் தீர்வு கண்டால் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது தான் சரியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.