ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது , கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார். கோலாரில் நடந்த பிரச்சாரத்தின் போது அவர் பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசினார். ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசினார்.
அப்போது பேசியதை இப்போது சர்ச்சை ஆக்கி இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏவும் ஆன புருனேஸ் மோடி இது தொடர்பாக சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா இந்த வழக்கை விசாரித்து ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று இந்த தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பினால் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் நாடெங்கிலும் காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இந்த சூழலில், குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. செசன்ஸ் நீதிபதியாக வர்மாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து சிவில் நீதிபதிகள் ரவிக்குமார் மேத்தா, சச்சின் பிரதபிரயா மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.