இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தை எழுப்பினார். தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது கடந்த ஆண்டில் இலங்கை கடற்படையினரால் 528 முறை சிறை பிறந்துள்ளனர்.
நடைபாண்டில் 40 நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், ஜனவரி 27ம் தேதி அன்று 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவை மட்டுமின்றி இலங்கை சிறைகளில், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்னமும் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே மத்திய அரசு இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தையின் மூலம் தமிழக மீனவர்கள் மீட்பதற்கான நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.