வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வாரங்கல் நகரம் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரமே தண்ணீரில் மிதப்பது போல் காணப்படுகிறது. சுமார் 82 பகுதியில் வசிப்பவர்கள் முற்றிலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
ஹனுமகொண்டாவில் உள்ள ஜவஹர் நகர், ஊச்சம்மகுண்டா, பவானி நகர், சம்மய்யா நகர், ராம்நகர், ஹண்டர் ரோடு, சாய்நகர், எஸ்ஸார் நகர், சிவநகர், வாரங்கல் ஆட்டோ நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ளவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகளில் மீட்டு பாதுகாப்பான தற்காலிக முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர். ஐதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் – ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஐதராபாத்தில் உள்ள முன்னேறு ஆறு நிரம்பி வழிகிறது. இதனால் ஐதராபாத்தில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் கொடடா, ஹுசூர் நகர், மிரியாலகுடா வழியாக திருப்பி விடப்படுகின்றன. இதனால் கொடடா – ஹுசூர் நகர் சாலையில் 5 கி.மீ. துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன