சூரியனை ஆய்வு செய்ய சென்ற ஆதித்யா எல்1 என்ன ஆனது?- இஸ்ரோ வெளியிட்ட தகவல்
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி அன்று சூரியனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சுமார் நான்கு மாத பயணத்திற்கு பின் இலக்கை அடையும் விண்கலம், தொடர்ந்து ஆய்வுப் பணிகளை தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதைக்கு கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி விண்கலத்தின் Steps உபகரணம் சேகரித்த அறிவியல் தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள துகள்களை ஆய்வு செய்ய அறிவியல் தரவுகள் உதவும் ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள STEPS உபகரணத்தில் இடம்பெற்றுள்ள 6 சென்சார்கள் மூலம் அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. STEPS கருவி சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அயனிகள், எலக்ட்ரான்களை ஆய்வு செய்கிறது. இந்த தரவுகள் விஞ்ஞானிகள் பூமியை சுற்றியுள்ள துகள்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.