நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உடல் பருமன் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. இதனால் பலரும் பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். உடல் எடையை குறைக்க டயட் எனும் பெயரில் பலர் பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடப்பதனால் உடல் எடை குறையாது உடல் ஆரோக்கியத்தை தான் அது கெடுக்கும் என்பது பலருக்கும் புரிவதில்லை. இருப்பினும் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கலாம். ஆனால் இன்றுள்ள அவசர காலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிலருக்கு ஜிம்முக்குப் போகவோ, தினமும் 45 மணி நேரம் நடக்கவோ நேரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் உடல் எடையை குறைக்க தினமும் சீரகத் தண்ணீரை பருகலாம். இது நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் செரிமான பிரச்சனைக்கும் இந்த சீரகத் தண்ணீர் தீர்வளிக்கிறது. மேலும் வயிற்று வலி, அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவி புரிகிறது. ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பின் அதனை வடிகட்டி குடித்து வர வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். காலையில் எழுந்தவுடன் முதல் விஷயமாக ஒரு டம்ளர் அளவு இந்த சீரக தண்ணீரை பருகி வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.
இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.