காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை துவக்கம் தான் எனவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஓபிசி அணியில் பொறுப்பில் உள்ள சூர்யா சிவா – டெய்சி சரன் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்து கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியது. இந்த சூழலில், சென்னை தேனாம்பேட்டையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சூரிய சிவா- டெய்ஸி சரண் அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேசிய ஆடியோ என்றாலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை விசாரணை அறிக்கை வரவுள்ளது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என கூறினார்.
சமூக வலைதளங்களில் அவர்களுடைய பக்கத்திலிருந்து அவர்கள் கருத்தை பதிவு செய்திருந்தால் நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், இது ஒரு ஆடியோ உரையாடல் என்பதால் விசாரணை தேவைப்படுவதாக அண்ணாமலை கூறினார்.
காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
கட்சியின் லக்ஷ்மண ரேகையை யார் மீறினாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை என்பது தொடக்கம் தான். இது தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கூறினார்.
ஆன்லைன் ரம்மிக்கான தடை என்பது காலத்தின் கட்டாயம் . தமிழ்நாடு அரசு இந்த தடையை கொண்டு வந்த போது பாஜக அதனை வரவேற்றது . ஆளுநர் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வரலாம் அது குறித்து எனக்கு தெரியவில்லை என கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கிறது. அதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் நிற்கும் என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.