பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை ஈபிஎஸ் அனுபவிப்பார்- டிடிவி தினகரன்
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த இருபெரும் தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு கட்சி வளருவதற்காக, மற்ற கட்சியை வளர விடாமல் தடுக்கின்றன. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பாஜக உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை ஈபிஎஸ் அனுபவிப்பார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார். அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல் சிதற போகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியிடம் பேசி, காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் நியாயமான முறையில் நடந்துகொள்ள அறிவுரை வழங்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடன் சென்று இணைந்தாலும் அமமுக இணையாது. அமமுக உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அதிமுகவுடன் இணையக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். யாரை நம்பியும் அமமுக கிடையாது. வாய்ப்பிருந்தால் வேறு யாருடனாவது கூட்டணி அமைப்போம் இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்” என்றார்.