ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரை சந்தித்தபோது வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சந்தித்த எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மனுவை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை ஆளுநர் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றார். திமுக அரசு பதவியேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாகவும், எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை இதுதான் அன்றாட நிகழ்வாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளையும் பார்க்கப்படுகிற செய்தியாக உள்ளதென தெரிவித்தார்.
கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மத்திய உளவு ஏஜென்சி மாநில அரசுக்கு எச்சரிக்கை செய்திரிந்தது. ஆனால் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். உளவுத்துறை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்பட்டு இருந்தால் இதை தடுத்திருக்கலாம் என பேசினார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் விசாரிக்கவில்லை. சரியான முறையில் விசாரணை நடந்திருந்தால் பள்ளி சூறையாடப்பட்டு இருக்காது. இதற்கு முழு பொறுப்பு திமுக அரசும், முதலமைச்சரும் தான் காரணம் என கூறினார்.
உளவுத்துறை சீரழிந்துள்ளதால், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் தங்கு தடை இல்லாமல் நடைபெறுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதென அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுபானங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படாமல், கலால் வரி செலுத்தப்படாமல் விற்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பேசியதாகவும், சட்ட மசோதா மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எம்.பி சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.