சமூக வலைத்தளங்களில் தன்னை அண்ணாமலை ஆதரவாளர்கள் கேலியும், கிண்டலும் செய்வதாக காயத்திரி ரகுராம் புகார் கூறியிருந்தார்.
புகார் கூறிய நடிகை காயத்ரி ரகுராமை பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கியுள்ளார். தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்தும் காயத்ரி ரகுராம் நீக்குபட்டுள்ளதாகவும்
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் காயத்ரி ரகுராமை கட்சியினர் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கத்திற்கு காரணம் என்ன என்று விசாரித்தபோது, திருச்சி சூர்யாவுக்கு மாநில அளவிலான பதவி கொடுத்தது தவறு என்றும் திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார். சூர்யாவால் டெய்சி என்ற பெண் அச்சுறுத்தப்பட்டதை கேட்டு இதயமே நொறுங்கி விட்டதாக கூறிய காயத்ரி ரகுராம் அவருக்கு துணை நிற்பதாக தெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூர்யாவிற்கு பதவியை வழங்கிய அண்ணாமலையையும் விமர்சித்து காயத்ரி ரகுராம் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த விமர்சனத்தை அடுத்து காயத்ரி ரகுராமை அண்ணாமலை ஆதரவாளர்கள் சரமாரியாக கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். சூர்யா சிவாவின் ஆபாச பேச்சு குறித்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனக சபாபதி விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணை முடியும் வரை கட்சி நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து,கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை வரவேற்பதாக காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் பேசுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியிலிருந்து என்னை நீக்கினாலும் எனது தேசப் பணி தொடரும் என்றும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி. ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ வெளியான போது விசாரணை குழு அமைக்கப்பட்டது. பாஜக மாநில பொதுச் செயலாளர் மலர்க்கொடி தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
2021 ஆகஸ்டில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகாத நிலையில் புதிய குழு அறிக்கை வெளியாகுமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.