Homeசெய்திகள்அரசியல்2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ

2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ

-

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “2025 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக செயல்படும் கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர், 2025 ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும், திமுக அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.

ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில் “பொங்கலுக்கு பின்னர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார், ஒராண்டுக்கு முன்னரே அதிமுக மக்களை சந்தித்து பிரச்சார பயணத்தை தொடங்கவுள்ளது, 2026 ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது, சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டேன், பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்” என கூறினார்.

MUST READ