மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி.பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தற்காலிக சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த 4 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் ஆட்சி நடத்தம் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த அவர், அண்மையில் பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். மரபுகளை மீறி தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதாக இந்திய கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவை விதிகளின்படி பிரதமர் மோடி முதலில் பதவியேற்பார். அவருக்கு பிறகு மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்பார்கள்.
அதன் பிறகு மாநிலங்கள் வாரியாக ஆங்கில எழுத்து வரிசையின் படி, அதாவது ஆந்திராவில் தொடங்கி மேற்குவங்கம் வரையிலான எம்பிக்ககளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். இரண்டாவது நாளான ஜூன் 25 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 264 எம்பிக்கள் பதவியேற்பார்கள்.
இந்தியா கூட்டணி கட்சி பதவி நிராகரிப்பு (apcnewstamil.com)
இதையடுத்து, மக்களவை சபாநாயகர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் மறுநாள், ஜூன் 27ஆம் தேதி மாநிலங்களவையும் தொடங்க உள்ள நிலையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். அவருடைய உரை மீதான விவாதம், வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும்.
குடியரசுத் தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2 ஆம் தேதி மக்களவையிலும், ஜூலை 3 ஆம் தேதி மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பேச உள்ளார்.